அப்போது எஸ்.ராமகிருஷ்ணனின் பரிந்துரையான ஹெய்டி-யைப் பார்த்தேன். பலமுறை இந்த புத்தகத்தை புத்தகக் கடைகளில் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். எஸ்.ராமகிருஷ்ணனின் எந்தப் பரிந்துரை புத்தகமும் இதுவரை என்னைக் கைவிட்டதில்லை. இதுவும் அப்படியே.
இந்தப் புத்தகத்தைப் பற்றிப் படிக்கும் முன் எஸ்.ராவின் அனுபவத்தைப்படித்துவிடுங்கள்.
இப்போது உங்களிடம் ஒரு கேள்வி...... உலகிலேயே அதிகபட்சக் கொடுமைக்கு உட்படுத்தப்படுவது யார்?
உங்களின் பதில் கீழ்க்கண்ட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஈழத்தமிழர்கள்...... பாலஸ்தீனியர்கள்..... தொழிலாளர்கள்.... தலித்துகள்...... சிறுபான்மை மக்கள்.... மனநோயாளிகள்..... விவசாயிகள்....
ஆனால் இவர்கள் யாருமே கிடையாது.... அதற்கான பதில் குழந்தைகள். குழந்தைகளின் மேலான வன்முறை கட்டற்றது. இந்தியாவில் இளையோர் எண்ணிக்கை முதியோர் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பெரும்பான்மையான கூட்டம் சிறுபான்மையால் தண்டிக்கப்படுவது குழந்தைகள் விஷயத்தில்தான். ஏனெனில் அவர்கள் பலகீனமானவர்கள். திருப்பித் தாக்க உடல்/மன வலிமை இல்லாதவர்கள். எனது நண்பர் ஒருவர் தன் பையனுக்கு ஓவியம், பாட்டு, கணக்கு, நடனம் இவற்றில் எல்லாம் பயிற்சி கொடுப்பதாக சொன்னார். பையனின் வயது என்ன? என்றேன். மூன்று என்றார். எதற்கு இவ்வளவு கொடுமை செய்கிறீர்கள் என்ற போது, இப்பொழுதே இப்படி பயிற்சி கொடுத்தால்தான் அவன் IIT -ல் சேர முடியும் என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் பார்க்கும் எந்த அறிவாளியும் இப்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. திறமையைக் கண்டுபிடித்து வளர்ப்பது தவறல்ல. திறமையை உண்டாக்க நினைப்பது முட்டாள்தனம் என்றெல்லாம் பேசிய பிறகு அவர் சொன்னது : இப்படி எல்லாம் நினைத்ததால்தான் நீங்க இப்படி ஒரு சாதாரண சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கீங்க. என்புள்ள நாசாவுல வேலை செய்வான் அப்பிடின்னார். எனக்கு அந்தக் குழந்தையை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1880 ல் எழுதப்பட்ட ஹெய்டி மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஹெய்டி ஒரு ஐந்து வயது குழந்தையாக அறிமுகம் ஆகிறாள். அவளுக்கு அம்மா அப்பா இல்லை. தாத்தாவிடம் வளர வேண்டிய சூழல். தாத்தாவோ ஊரே வெறுக்கும் மனிதர் அல்லது ஊரை வெறுக்கும் மனிதர். அங்கே அவள் எப்படி வாழ்கிறாள். தாத்தாவிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் எப்படி கற்றுக் கொள்கிறாள் என்பதுதான் கதை.
கதையில் மிகக் குறைவான கதாப்பாத்திரங்களே வருகின்றன. ஹெய்டி, அவளின் தாத்தா, பீட்டர் (ஆடு மேய்க்கும் சிறுவன்) மற்றும் அவன் குடும்பம், நடக்கவே முடியாத கிளாரா, டாக்டர், கண்டிப்பான உதவியாளர் மேயர், கிளாராவின் பாட்டி & அப்பா.இவை தவிர சில கதாப்பாத்திரங்கள் உண்டு. பூக்களும், மலையும், ஆடுகளும் சிறுவர் உலகின் சிறந்த குறியீடுகள். அவர்கள் அவற்றுடன் பேசுகிறார்கள், விளையாடுகிறார்கள்.
உடல் நலமில்லாத பணக்காரக் குழந்தையான கிளாராவிற்கு தோழியாக பிராங்க்பர்ட் கொண்டு செல்லப்படும் ஹெய்டி, அங்கு கிளாராவுடன் ஏற்படும் நட்பு. அங்கே அவளின் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒருத்தியானாலும் அவளின் மனநிலை பாதிக்கப்பட்டு மறுபடி தாத்தாவிடமே அனுப்பப்படுகிறாள். அங்கே அவளின் வாழ்க்கை எப்படி சுவாரசியமாகிறது, பிறகு வரும் கிளாராவின் உடல்நிலை எப்படி மாறுகிறது, பீட்டரின் மனநிலை என்ன என்பதுதான் கதை. குழந்தைகள் எல்லாமே உங்களால் முடியும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நாம் அவர்களுக்கு எதெல்லாம் முடியாது என்று சொல்லிக் கொடுக்கவே முயல்கிறோம். இதில் பீட்டரின் பாட்டிக்கு கண் பார்வையை தன் தாத்தாவால் திரும்பத்தர முடியுமென்று ஹெய்டி நம்புகிறாள். முடியாதெனும்போது பார்வையின்மை இயல்பானது என ஏற்றுக் கொண்டு அவள் பாட்டிக்குத் தேவையான ரொட்டியைத் தருகிறாள். அதேபோல நடக்கவே முடியாத கிளாரா நடக்க முடியும் என்று ஹெய்டி, பீட்டர், கிளாரா மூவருமே நம்பி வெற்றி பெறுகிறார்கள்.
எது அவர்களால் முடியும் என்று அவர்களே (குழந்தைகளே) தீர்மானிக்கட்டும்....தீர்மானிக்க வேண்டியது நாமல்ல. அதேபோல் குழந்தைகள் நீங்கள் அவர்களுக்குத் தரும் வசதிகளைவிட அன்பையும், இயல்பான கற்றலையுமே விரும்புகிறார்கள் ஹெய்டியை போல. இது குழந்தைகளுக்கான நாவல் மட்டுமல்ல, எல்லா வயதினருக்குமான நாவல். நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது கண்டிப்பான மேயரை உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் இந்தப் புத்தகத்தை உங்கள் குழந்தை படித்தால் உங்களையே மேயராக நினைக்கலாம். எனவே நீங்களே மேயரைப் போல வாழ்வதை உணர்ந்து உங்கள் குழந்தையின் மீதான வன்முறையை கைவிட்டால் அது ஹெய்டிக்குக் கிடைத்த வெற்றி.
புத்தகத் தமிழாக்கம் நன்றாக இருக்கிறது என்றாலும் சில குறைகள் உள்ளன. விலங்குகளை மேற்கத்தியர்கள் அவன் அவள் என்று அழைப்பார்கள் ஆனால் நாம் விலங்குகளை அது/அவை என்றே அழைப்போம். இங்கும் அப்படியே மொழிபெயர்த்திருக்கலாம். ஆடுகள் கூட அவள் என்றே அழைக்கப்படுவது அந்நியப்படுத்துகிறது.
புத்தகத்தின் பெயர் : ஹெய்டி
எழுதியவர் : ஜோஹானா ஸ்பைரி
மொழிபெயர்த்தவர் : ஸ்ரீமதி, கயல்விழி
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ,
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
விலை : 160 ருபாய்