Saturday, July 22, 2017

எழுத்தாளர் முற்றம் - உரையாடல்



என் வாசிப்பின் துவக்கம்:

என் அம்மா ஓர் ஆசிரியை. அவர் வாங்கித்தந்த சோவியத் வெளியீடுகளில் இருந்து துவங்கியது என் வாசிப்பு. அவை யாவும் படக்கதைகள். இன்றும்கூட ஞாபகத்தில் நிற்பவை. ஏதேனும் ஒரு பழைய புத்தகக்கடையைக் கண்டால் அதில் சோவியத் புத்தகங்கள் இருக்கிறதா என்று பார்க்காமல் நான் நகர்வதில்லை. வீடு முழுக்க நிறைந்து கிடக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள், அவற்றில் சொல்லப்பட்ட கதைகள் என்று வாசிப்பை நோக்கி நான் வேகமாக் நகர்ந்தேன்.

என்னுடைய ஏழாம் வயதில் நூலகம் எனக்கு நேரடியாக அறிமுகம் ஆனது. நூலகர் என் குடும்ப நண்பர் – குருசக்தி கணபதி. அடுத்த இருபது வருடம் அவர் என்னுடைய ஊரின் நூலகத்தில் பணிபுரிந்தார். அவரை நான் இப்போதும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

நான் முதல் முதலாகப் படித்த புத்தகம் – ஒரு Applied Psychology புத்தகம் – அதன் பெயர் மனோசக்தி. 1940களில் வெளியான புத்தகம்.

கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து என்னுடைய ஆராய்ச்சிக்கென நான் தேர்ந்துகொண்ட துறை – குழந்தைகள் நரம்பியல், உளவியல் சிக்கல்கள், கற்றல் திறன் மேம்பாடு மற்றும் அது சார்ந்த தகவலியம்.

முதல்முதலில் புத்தகங்களை அறிமுகம் செய்த என் பெற்றோர் இப்படிப்பட்ட ஆராய்ச்சிக்குள் போகவேண்டும் என்ற குறிக்கோளுடன் என்னிடம் அந்தப் புத்தகங்களைத் தரவில்லை. புத்தகங்கள் என்னையும், நான் புத்தகங்களையும் தேர்ந்துகொண்டோம். இப்படித்தான் வாசிப்பு நம்மையறியாமல் நம்மை ஒழுங்குபடுத்துகிறது.

பெற்றோர் வாசிக்காமல் ஒரு குழந்தை வாசிப்பது என்பது விதையில்லாமல் ஒரு மரம் வளர வேண்டும் என்று நினைப்பதற்குச் சமம். ஒரு குழந்தைக்கு வாசிப்பைப் பயிற்றுவிக்க மிகச் சிறந்த வழி – பெற்றோராகிய நீங்கள் வாசிப்பதும், அதைக் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்வதும்தான்.

கற்றலுக்கும் வாசிப்பிற்குமான உறவு:

நான் செவ்விந்தியக்கதைகளை மொழிபெயர்த்தபோது, அதில் ஒரு கதை செவ்விந்தியர்களுக்கும் காட்டுப்புறாக்களும் இடையிலான உறவைச் சொல்கிறது. ஏன் அந்தப் புறாக்களை யாரும் வேட்டையாடக்கூடாது? என்பதுதான் கதை. நான் அந்தப் புறாவைப் பற்றிய மேலும் தகவல்களைச் சேகரித்தேன். அதன் பெயர் – Passenger Pigeon. இந்தப்பெயர் ஒரு ஃபிரஞ்ச் வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வகைப் புறாக்கள் அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கில் வாழ்ந்திருக்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் செவ்விந்தியர்கள் அவற்றுடன் வாழிடத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். வெகுசில நேரங்களில் அவற்றை வேட்டையாடியிருக்கிறார்கள். ஆனால் வெள்ளையர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்து அங்கே நுழைந்த 400 வருடங்களில் அந்தப் புறாக்கள் ஒன்றுகூட மிச்சம் இல்லை. 1914-ஆம் ஆண்டு கடைசி புறாவான மார்த்தா இறந்துபோனது. இதே கதைதான் அமெரிக்க காட்டெருமைக்கும் நேர்ந்தது. இன்று எஞ்சி இருப்பது மிகச் சில.

கவனியுங்கள் – ஒரு கதை, மொழி, பண்பாடு, படையெடுப்பு, சிந்தனை வகை, வரலாறு. அழிவு என்று பல இடங்களைத் தொட்டுச் செல்கிறது. இந்தத் தகவல்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. பேச வைக்கின்றன. பிற உயிர்கள் எவ்விதத்திலும் மனிதனுக்குக் குறைந்தவை அல்ல என்று உணர வைக்கின்றன. இதற்குப் பெயர்தான் கல்வி. இன்றைய கல்வி – புறா என்றால் என்ன என்றே தெரியாத மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு அனுபவத்தைச் சொல்கிறேன்.

கடந்த ஆண்டின் மழையின்போது நான் என் வீட்டில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தெரு வழியே அருகில் இருந்த ஏரிக்கு வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. அப்போது ஒரு பறவை – கடுஞ்சாம்பல் நிறத்துடன், மார்பில் வெள்ளைக்கோட்டுடன் புதருக்குள் இருந்து வெளியே வந்து தண்ணீரில் பூச்சி பிடித்துவிட்டு பின் புதருக்குள் ஓடிவிட்டது. மழை ஓய்ந்த ஒரு மாலை நேரம், அது தன் இரு குஞ்சுகளுடன் வெளியேறி வந்து அவற்றுக்கு உணவூட்ட ஆரம்பித்தது. நான் அந்தப் பறவையின் அடையாளங்களை வைத்து அதன் பெயரை இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.

அதன் பெயர் – White breasted water hen. அது இங்கே வாழ்கிறதென்றால் அதற்கு ஒரு தமிழ் பெயர் இருந்தே ஆகவேண்டும் இல்லையா? இணையத்தில் தேடினேன். உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை. பின், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் தேடினேன். புறநானூற்றில் இப்படி ஒரு பாடல் இருக்கிறது.

பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்,
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி   
நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்,
துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்,
மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே.

போருக்குப் போகவிருக்கும் வீரர்களுக்கு அரசன் கள்ளும், விருந்தும் அளிக்கிறான். அப்போது வீரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் – எப்படியும் நாம் வெற்றிபெறுவோம். அப்போது நம்முடைய அரசன் நமக்கு வெகுமதியாக நிலங்களை வழங்குவான். அப்படி வழங்கும் ஊர், தண்ணீருக்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கும் எருமையின் கொம்பை ஒத்த பாசிப்பயற்றின் தோட்டின் மேல் தன் கன்றோடு காட்டுமாடு உறங்கும் முல்லை நிலமாக இருந்தால், அதை வேண்டாம் என மறுத்து, நீருக்கு அருகில் முட்டையிட்டு வாழும் கம்புள் (சம்பங்கோழி) வாழும் மருதநிலத்து ஊர்களை வேண்டுவோம் என்கிறார்கள்.
ஆம். அந்தப் பறவையின் பெயர் கம்புள் அல்லது சம்பங்கோழி.
மேலே உள்ள பாடல் நமக்கு என்னவெல்லாம் சொல்லித்தருகிறது. 2000 ஆண்டுகளுக்குப் பின்னும் அந்தப் பறவை மாறவில்லை. அது மருதநிலத்தில் வாழ்கிறது. அதற்குத் தெரியாது அந்த இடம் தற்போது இரண்டரை கோடி ரூபாய் போகிறதென்று. அதற்குத் தெரியாது இன்னும் மூன்று மாதத்தில் அங்கே ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வரப்போகிறதென்று. நமக்குத் தெரியாது அது அந்தப் பறவையின் வாழிடம் என்று.
இதுதான் கல்வி. இந்தக் கல்வித்திட்டத்தில் நீங்கள் தோற்கும் வாய்ப்பே இல்லை.

ஒரு கதையை வாசித்து, அதை இன்னொருவருக்குச் சொல்லும்போது அது வேறொரு பரிமாணத்தை அடைகிறது. மேலே உள்ள இரண்டு உதாரணங்களையும் பாருங்கள் – உங்களுக்கே புரியும்.
ஒரு குழந்தையைப் புரிந்துகொள்வதெல்லாம் பெற்றோரின் வேலை அல்ல. உங்கள் கனவுகளுக்குள் அவர்களை அடைக்காதீர்கள். அவர்களுக்கான வெளியைத் திறந்து வையுங்கள். அவர்கள் யார் என்று உங்களுக்குச் சொல்லிச் செல்வார்கள். அவர்களுடன் பயணப்படுங்கள்.

சரி. யாரை வாசிப்பது?
புனைவில்:
அழ.வள்ளியப்பா (3-5 வயதுக் குழந்தைகளுக்கு) – பழனியப்பா பிரதர்ஸ், NCBH
வாண்டுமாமா (5-15 வயதுக் குழந்தைகளுக்கு) – கவிதா பப்ளிகேஷன்ஸ்
முல்லை தங்கராசன் (5-15 வயதுக் குழந்தைகளுக்கு) – பாக்கெட் நாவல் அசோகன்
விழியன் (5-10 வயதுக் குழந்தைகளுக்கு) – புக் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், வானம்
யெஸ்.பாலபாரதி (5-15 வயதுக் குழந்தைகளுக்கு) புக் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், வானம்
ஆயிஷா நடராஜன் (5-15 வயதுக் குழந்தைகளுக்கு) புக் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்
ஜெயமோகன் (15 வயதுக் குழந்தைகளுக்கு) – பனிமனிதன் – கிழக்கு பதிப்பகம்
கல்கி (15 வயதுக் குழந்தைகளுக்கு)
கி.ரா (5-15 வயதுக் குழந்தைகளுக்கு) – அகரம்
எஸ்.ராமகிருஷ்ணன் (5-15 வயதுக் குழந்தைகளுக்கு) – உயிர்மை
யுமா வாசுகி (5-15 வயதுக் குழந்தைகளுக்கு) - புக் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், NCBH, NBT

அபுனைவில்:
வாண்டுமாமா (5-15 வயதுக் குழந்தைகளுக்கு) - கவிதா பப்ளிகேஷன்ஸ்
பிலோ இருதயநாத் (10-17 வயதுக் குழந்தைகளுக்கு) – வானதி பதிப்பகம்
மா.கிருஷ்ணன் (10-17 வயதுக் குழந்தைகளுக்கு) – காலச்சுவடு
தியடோர் பாஸ்கரன் (10-17 வயதுக் குழந்தைகளுக்கு) – உயிர்மை, காலச்சுவடு
கிருஷ்ணா டாவின்சி (10-17 வயதுக் குழந்தைகளுக்கு) – உயிர்மை – சூழலியல் கட்டுரைகள்
பெரியசாமி தூரன் (10-17 வயதுக் குழந்தைகளுக்கு) – கலைக்களஞ்சியம் – தமிழ்நாடு அரசு

முன்னோடிகள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்களின் புத்தகங்கள் கிடைப்பதில்லை. நான் சிறுவயதில் படித்த தமிழ் புத்தகங்கள் இப்போது எங்குமே இல்லை. இன்றைய நிலையில் பிலோ இருதயநாத் புத்தகங்கள் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
இப்போது சிறார் இலக்கியத்தில் இயங்கிவருவோரில், மிகமிக முக்கியமானவர் என்று யுமாவாசுகியைச் சொல்வேன். கிட்டத்தட்ட ஒரு அரசு நிறுவனம் செய்யவேண்டிய வேலையை அவர் ஒரே நபராகச் செய்து வந்திருக்கிறார்/வருகிறார். எங்களைப்போன்ற நபர்களுக்கு பெஞ்ச் மார்க் ஒன்று வேண்டும் அல்லவா? அப்படி ஒன்றை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றால் யோசிக்கவே வேண்டாம் - அது யூமாவாசுகியின் படைப்புகள்தான்.
நீங்கள் எங்காவது யூமாவாசுகி என்ற பெயருடன் புத்தகம் இருந்தால், யோசிக்கவே வேண்டாம். உங்கள் குழந்தை வாசிக்க நீங்கள் அதை வாங்கிவிடலாம். எழுத்தாளர்கள் இடையே அவருடைய மேற்கோள் ஒன்று மிகப் பிரசித்தம் – “தோழர், வாசிக்காம எழுத வராதீங்க.” மிகமென்மையான குரலில் பேசும் கறாரான விமர்சகர்.
யெஸ்.பாலபாரதி – சிறப்புக்குழந்தைகள் குறித்த செயல்பாட்டாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர், கல்வி சார்ந்த ஊடகப்பணியில் இருப்பவர். ஆமை காட்டிய அற்புத உலகம் மற்றும் சுண்டைக்காய் இளவரசன் என்ற இரு புத்தகங்களை எழுதியிருக்கிறார். இரண்டுமே மிகக்குறுகிய காலத்தில் இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கின்றன.
முல்லை தங்கராசன் – மிகச்சிறந்த படைப்பாளி. இவருடைய புத்தகங்களுக்கான பதிப்புரிமையை பாக்கெட் நாவல் அசோகன் வாங்கியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட எனக்கு மிக்க மகிழ்ச்சி. திரு.அசோகன் குறைந்த விலையில் இலக்கியப்புத்தகங்களை வெளியிட்டு நிறையப் பேரிடம் கொண்டு சேர்க்கக்கூடியவர். (உதா: புளியமரத்தின் கதை, ஸீரோ டிகிரி) விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
வாண்டுமாமா – புத்தகங்களை வாங்குங்கள். வேறென்ன சொல்ல? புனைவுகள், அபுனைவுகள் தவிரவும், கௌசிகனாக அவர் தன்னைப்பற்றி எழுதியிருக்கும் புத்தகம் – மிக முக்கியமான ஆவணம்.
கல்கி, தமிழ்வாணன் – பதின் பருவத்தில் இருப்போர் வாசிக்க நம்மிடம் நிறையப் புத்தகங்கள் இல்லை. இந்த இடைவெளியை நிறைக்க இன்றும் இவர்கள் தேவைப்படுகிறார்கள்.
எஸ்.ராமகிருஷ்ணன் – குழந்தைகளுக்கான புத்தகங்கள் நிறைய எழுதியிருக்கிறார். கதை சொல்லும் நிகழ்வுகள் நடத்துகிறார். வாய்ப்பிருப்பின், தவறாமல் கலந்து கொள்ளுங்கள். நிறைய புதுப்புத்தகங்களை அறிமுகம் செய்வார்.
ஜெயமோகன் – பனி மனிதன் – குழந்தைகள், பதின் பருவத்தினருக்காக என்று தமிழில் எழுதப்பட்ட பெரிய நாவல். பெரும் வாசிப்புகளின் துவக்கப்புள்ளியாக இதைச் சொல்லலாம்.

வாசிப்பு நுகர்வைக் கூட்டுவதில் வேட்டை இலக்கியங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. அவ்வகையில், குமாவும் புலிகள் – ஜிம் கார்பெட் (காலச்சுவடு), எனது இந்தியா - ஜிம் கார்பெட் (காலச்சுவடு), ஏலகிரியில் சிறுத்தைவேட்டை – ஆண்டர்சன் - (பாரதி புத்தகாலயம்), ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள்(NBT) – கேடம்பாடி ஜட்டப்ப ராய் முக்கியமான நூல்கள்.
வானம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கும் உலக கிளாசிக்குகளின் சுருக்க வடிவம், குழந்தைகள் உலக இலக்கியத்திற்குள் நுழைய நல்லதொரு தொடக்கமாக அமையும்.
அபுனைவுகளில் தியடோர் பாஸ்கரன் எழுதியிருக்கும் அத்தனை சூழலியல் புத்தகங்களும் மிக முக்கியமானவை.

வாங்க வேண்டிய புத்தகங்கள் சில:
கிரா – தாத்தா சொன்ன கதைகள் – அகரம்
தமிழ்வாணன் – சங்கர்லால் துப்பறிகிறார் – (அனைத்தும்) – மணிமேகலை பிரசுரம்
ஆயிஷா - புக் ஃபார் சில்ரன் – ஆயிஷா நடராஜன்
பென்சில்களின் அட்டகாசம் - புக் ஃபார் சில்ரன் – விழியன்
எனது கணவரும் ஏனைய விலங்குகளும் - புக் ஃபார் சில்ரன் - ஜானகி லெனின்
குழந்தைகளுக்கு லெனின் கதை – ஆதி.வள்ளியப்பன் - புக் ஃபார் சில்ரன்

ஆங்கிலத்தில்,
Andersen Hans Christian Stories
Robinson crusoe
Treasure Island
Swiss family robinson
Around the world in 80 days
Alice in wonderland
Gulliver's travels
Heiti
Jungle book
The call of wild
James herriot books
The Lion, the Witch and the Wardrobe
Moby-Dick
The Old Man and the Sea
The Jim corbett omnibus
Kenneth anderson omnibus

செயல்பாட்டாளர்கள்:
பவா செல்லத்துரை – எழுத்தாளர் - இவருடைய “கதை சொல்லும் நிகழ்வு” தமிழ் இலக்கிய உலகின் முக்கிய பண்பாட்டு செயல்பாடு. ஒரு கதையை யாராவது சொல்லி கேட்க வேண்டும் என்றால் – பவா'தான் என் முதல் விருப்பத்தேர்வு. கதைகளை நிகழ்த்திக்காட்டுவார் – ஒரு தேர்ந்த மந்திரவாதியைபோல. இதில் 10% உங்களால் செய்ய முடிந்தால் உங்கள் குழந்தைக்கு வாசிப்பின் ருசியை நீங்கள் திகட்டத் திகட்ட வழங்கிவிட முடியும்.
இனியன் – தொடர்ந்து சிறார்களுக்கான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார். கதை சொல்வது, நாடகம் போடுவது, புத்தகங்களை வசிக்க வைப்பது என்று எப்போதும் குழந்தைகள் உலகத்திலேயே வாழும் செயல்பாட்டாளர். ஃபேஸ்புக்கில் இவரைப் பின்தொடர்ந்தால், குழந்தைகளுக்கான நிகழ்வுகள் பற்றி அறியலாம். விருப்பமும் வாய்ப்புகளும் இருப்பின், உங்கள் ஊரிலேயே அத்தகைய நிகழ்வுகளை ஒருங்கிணைக்க உதவுவார்.

பிற இதழ்கள்:
புத்தகம் பேசுது – வண்ணநதி – சிறார் இதழ்
மின்மினி
பெரியார் பிஞ்சு
தும்பி
சுட்டி விகடன்
லயன் காமிக்ஸ்
தமிழ் ஹிந்து – மாயா பஜார்

என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் பாரதி புத்தகாலயம் – தோழர்கள் நாகராஜ், ப.கு.ராஜன் ஆகியோருக்கு நன்றியும் அன்பும்.

22/07/2017 புத்தகக்கண்காட்சியில் நிகழ்ந்த எழுத்தாளர் முற்றம் நிகழ்வில் நான் பேசியவற்றின் தொகுப்பு.

Monday, July 10, 2017

இலை உதிர்தல் - 1




இலையடி நுணல்
சொட்டும் ஒருதுளி
பெருமழை



நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - நாம் 'இப்போது' என்ன செய்ய வேண்டுமோ அதை முழுமூச்சாகச் செய்வது. 
ஏனென்றால் அதை மட்டும்தான் நம்மால் செய்ய முடியும்.



சுயம் கொண்ட மனிதனுக்குக் கொடுக்கப்படும் பெரிய தண்டனை -
சராசரிகளைச் சகித்துக்கொள்வது. 
சுயவதைக்காரர்கள் மட்டும்தான் சராசரிகளைச் சகித்துக்கொள்ள முடியும்.


மழை யானை
பெய்யும் சாரல்
நனைகையில்,
அப்படித்தான் ருசிக்க வாய்க்கும்
துளித்துளியாய்.
மூளைக்குள் பாய்கையில்
புசியுமாம் கொஞ்சம் மனதிற்கும்.

என்(னுடன்) வாழ்தல்
மூச்சுத்திணறுகிறதா?
உங்களால் தாங்க முடியவில்லையா?
விரைவாக விலகி ஓடுங்கள்.
உங்களை அழுத்துவது
என் அகங்காரமல்ல,
பேரன்பின் கனம்.

வறண்ட நிலத்தில் தவிக்கும் தேரை மேல் விழும் ஈர மணல் போல், 
என் மேல் சரிகிறது இந்த இசை.

“Glorification – Romanticism – Sentimentalism” இவைதான் மனிதனின் சிந்தனையைப் பாதிக்கும் பிரச்சனைகளின் ஆரம்பப்புள்ளிகளாக இருக்கின்றன. தற்காலத் தமிழ் இலக்கியத்தில் இவற்றை அளவே இல்லாமல் புனிதப்படுத்தி உண்மையில் இலக்கியம் என்றால் எப்படி இருக்கும் என்பதே தெரியாத அளவிற்குச் சூழலை மாசுபடுத்தி இருக்கின்றனர். உண்மையில் இந்த மூன்று விஷயங்களும் எப்படி ஒரு மனிதனின் வாழ்வைப் பாழ்படுத்தி அழிக்கக் கூடியவை என்று எழுதினால் அது ஒரு சிறப்பான இலக்கியப் படைப்பாக இருக்கும்.


Thursday, August 18, 2016

சிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்


அண்ணன் பாலபாரதி புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்து கண்டிப்பாகப் படிக்குமாறு சொன்னார். அவருக்கு நன்றி.

சிக்கவீர ராஜேந்திரன் நாவல் பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டது. இங்கே நான் பேசப்போவது ஒரு வாசகனாக என்னுடைய பார்வையை மட்டுமே.

இந்த நாவலின் பாராட்டத்தக்க அம்சமாக நான் கருதுவது - அதன் களம் – முக்கியமாக அழிவின் ஆரம்பத்தில் இருக்கும் குடகு ஜமீன் – ஆங்கிலேயப் படையெடுப்பின் ஆரம்ப காலம் – மன்னர், மந்திரிகள், மக்கள் - அவர்களிடையே இருக்கும் தவிர்க்கவே முடியாத உறவு.

ஓர் எழுத்தாளனுக்கு வரலாறு அளிக்கும் சுதந்திரத்தை வேறெந்தக் களமும் அளிப்பதில்லை. இந்த இடத்தில் போரும் வாழ்வும் நாவலை எடுத்துக் கொள்வோம். அதில் இருக்கும் நீண்ட அத்தியாயங்கள், கதாப்பாத்திரங்களின் குணநலன்களையும், நிகழ்வுகளையும் வரலாற்றின் வேறொரு முனையிலிருந்து பார்க்கும் வாய்ப்பை ஒரு வாசகனுக்கு அளிக்கின்றன.

நான் இந்த நாவலை வாசிக்கும்போது, யாரோ ஒருவர் நம்மிடம் அந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். கதை கேட்கும் போது, சொல்லும் நபரின் ஆளுமை சொல்லும் விஷயத்தில் கலந்து கேட்கும். அது கேட்கும் நபர் ஒவ்வொருவருக்கும் அவரவர் அநுபவம் மற்றும் விருப்பம் சார்ந்த புரிதலையே தருகிறது. எந்த ஒரு கதையும் இன்னொருவருக்கு அதே கதையாகப் போய்ச் சேர்வதில்லை. இதை அனுபவித்துப் பார்க்க எழுத்தாளர்கள் பவா, எஸ்.ராமகிருஷ்ணன் இருவரின் கதை சொல்லலை மற்றவர்களின் கதை சொல்லலோடு ஒப்பிடலாம். குறிப்பாக பவா எழுத்திலும், பேச்சிலும் கதைகளை நிகழ்த்திக் காட்டுவார். ஆனால் மாஸ்தி அய்யங்கார் தனக்குத் தெரிந்த ஓர் உண்மையை, கொஞ்சமே கொஞ்சமாகத் தன் கற்பனைகளைக் கலந்து சொல்கிறார். அங்கே கதை நிகழவெல்லாம் இல்லை, கதை நமக்குச் சொல்லப்படுகிறது.

இலக்கியத்தில் நுழையும் வாசகனுக்கு இந்த ‘சொல்லல்’ பிடித்துதான் போகும். ஏனென்றால் வாசகன் அங்கே நடந்ததை ஒரு நம்பிக்கையான நபரிடம் இருந்து கேட்கும் உணர்வை அடைகிறான். அங்கே பெரும் கற்பனைகளோ, நிகழ்ந்ததற்கு முற்றிலும் மாறான சம்பவங்களோ நிகழவே போவதில்லை. அரிச்சந்திர மயானகாண்டம் நாடகம் பார்ப்பதைப் போல, ஆண்டாண்டு காலமாய் நமக்குத் தெரிந்த அதே கதையை நிகழ்த்தினாலும், அது நமக்கு அளிக்கும் ஒட்டு மொத்த உணர்வுக்காக அதை மீண்டும் மீண்டும் பார்த்தபடியே இருப்போம் இல்லையா? அதுதான் சிக்க வீர ராஜேந்திரனிலும் நிகழ்கிறது.

இந்த நாவலைப் படிக்கும் போது நாம் மேலே சொன்ன விஷயங்களோடு எழுதப்பட்ட காலம், எழுதியவரின் பின்புலம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு சில சலுகைகளை அளிக்க வேண்டியதிருக்கிறது. இந்த நாவலில் சொல்லப்படும் தாரை தப்பட்டை கேட்பவனுக்கு கர்நாடக இசை புரியுமா? கடவுள் மறுப்புக் கொள்கைகளை விமர்சிக்கும் பகுதி, திப்புவை மதவெறியனாகக் காட்டுவது, சாதிய/மத நியாயப்படுத்தல்கள் - இவற்றையெல்லாம் நான் கணக்கில் கொள்ளவில்லை.

பொதுவாக நாவலின் ஓட்டத்திலேயே அதைப் புரிந்துகொள்வது என்பது ஒரு வழிமுறை. ஆனால் நான் எந்த நாவலையும் அதன் பெரும் கூறுகளின் வழியே மட்டுமே புரிந்து கொள்வேன். இந்த நாவலை நான் நான்கு வெவ்வேறு பார்வைகளில் புரிந்து கொள்ள முயன்றேன்.

குடகின் ஜமீன் - சிக்க வீர ராஜேந்திரன் என்ற மனிதன் - மக்களும், சுரண்டல்களும், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பும் - நொண்டி பசவன் & ராஜேந்திரன் என்ற இரு தனி நபர்களிடையேயான உறவு அதில் சிக்கி சீரழியும் நாடு.

இதில் அய்யங்கார் குடகின் வரலாற்றையும் அழிவையும் முதன்மைப்படுத்தியே இந்த நாவலை எழுதியிருக்கிறார். அந்தப் பார்வையில் அதை நாம் படித்தால் இந்த நாவல் ஒரு குறிக்கோள் கொண்டதாகவேபடுகிறது. இது குடகின் கதை என்றால் சிக்கவீர ராசேந்திரன் ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே. குடகின் வர்ணனைகள், பின்புலம், மக்கள் மற்றும் அதிகார முரண்கள் வழியாக அவனும் பேசப்பட்டிருக்க வேண்டும். மிகச்சமீபத்தில் இந்தக் கதை நிகழும் பகுதியில் இரண்டு பயணங்களை மேற்கொண்டேன். அதை வைத்துப் பார்த்தால் நாவலில் வரும் வர்ணனைகள் மிகத் தட்டையானவை. நாவல் என்பது ஒரு மேடை, அதில் நிகழும் சூழல் குறித்த ஆழமான வர்ணனைகள் இல்லாவிட்டால் வாசகன் அந்தச் சூழலோடு தன்னை இணைத்துக் கொள்ள முடியாமல் போகிறது. அதுபோக, அந்நிலத்தின்  நீண்ட வரலாறு, நிலவியல், வருமானம், அது சார்ந்து மக்கள் வாழ்வு, தலைமை, ஒழுக்கம் மற்றும் ஒழுக்க மீறல், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்று ஒரு முழுமையான பார்வையை நாவல் முன் வைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஓர் ஒப்பீட்டிற்காக நாம் கிராவின் கோபல்ல கிராமத்தை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு வரலாற்றைப் பேசுகிறது – மக்களின் வரலாறு. அதில் வரும் கழுவேற்றும் காட்சியில் சுற்றிலுமான மக்கள், அவர்களின் மனநிலை, ஏற்பாடுகள், உடலைத் துளைத்து வெளியேறும் கழு, அதன்பின் மக்களிடம் ஏற்படும் மனநிலை மாற்றம், அதற்குப் பின் ஏற்படும் சமாதானம், கொல்லப்பட்டவன் கடவுளாதல் என்று அதை கிரா நம்மிடம் சொல்வதன் மூலம் – அவர் நிகழ்த்திக்காட்டுகிறார். ஆனால் சிக்க வீர ராஜேந்திரனில் அது தவறிவிட்டது.

இந்த நாவலை சிக்கவீர ராஜேந்திரன் கதையாக மட்டுமே கொண்டு பார்த்தோமென்றால், அவனுடைய அதிகாரவெறி, அதற்காக அவன் மேற்கொள்ளும் நேர், எதிர் நடவடிக்கைகள், உடல் நலன், ஒரு குழந்தையைக் கொல்லும் மனநிலை - சுற்றிலுமான பெண்கள் - அவன் அம்மா, பெரியம்மா (நொண்டி பசவனின் அம்மா பகவதி), அவனையும் பசவனையும் வளர்த்த ஒரே கிழவி, ராஜேந்திரனின் மனைவி, மகள், தங்கை, பேத்தி, விலை மகளிர், ஆசைக்காகவே தூக்கி வரப்படும் பெண்கள், வெள்ளைக்காரப் பெண்கள் - அவனுடைய மந்திரிகள், உத்தையதக்கன், சென்னபசவன் என மையத்தைச் சுற்றி விரிவாக அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய மனநிலை விரிவாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். நாவலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அதற்கான வெவ்வேறு ஆழங்களோடு பேசப்படவேண்டும். ஆழமற்ற புறச்சித்தரிப்புகள் வாசகனுக்குக் கடந்தவேண்டிய உணர்வுகளைக் கடத்துவதில் தொல்வியுறுகின்றன.

இன்னொரு பார்வையில் மக்களும், அரசச் சுரண்டல்களும், ஆங்கிலேய ஆக்கிரமிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன - அரசு, மக்கள், சாதிய  முரண்கள், அதிகாரப் படிநிலைகள், மக்களை அழுத்திச் சுரண்டி கொழுக்கும் அரசர்களுக்கும் மக்களுக்குமான முரணியக்கம், அது குறித்த கேள்விகள், ஏன் மக்கள் முற்றுமுதலாக ஆங்கிலேயரை எதிர்க்கும் மனநிலைக்கே வரவில்லை? ஏன் சாதாரண மனிதர் வாழ்விற்கும் அரச வாழ்விற்குமான இடைவெளி இவ்வளவு பெரியதாக இருந்தது? புரட்சி இயக்கங்கள் ஏன் மன்னரை எதிர்த்த அளவில் ஆங்கிலேயர்களை எதிர்க்கவில்லை? என்பது போன்ற கேள்விகளுக்கு நாவலில் இடமே இல்லை.

இந்த நாவலை மற்றொரு கோணத்தில் புரிந்து கொள்ள முயன்றேன். அது நொண்டி பசவன் மற்றும் சிக்க வீர ராஜேந்திரன் இடையிலான உறவு. நொண்டி பசவனைக் கதாநாயகனாகக் கொண்டு அவனுடைய பிரதியாக (Copy) சிக்க வீர ராஜேந்திரன் படைக்கப்பட்டு, இந்த இருவரிடையே இருக்கும் இயைபுகள் (harmony), முரண்கள் எப்படி ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்கிறது என்று புரிந்துகொள்ள முயலும் போது இது வேறொரு நாவலாக இருக்கிறது. உண்மையில் அத்தனை தகுதியும் கொண்ட பசவன் கால் முறிக்கப்பட்டு நாய்களோடு நாயாக வளர்க்கப்படுவதும், தகுதியேதுமற்ற ராஜேந்திரன் முழு அதிகார வசதிகளோடு வளர்க்கப்படுவதும் - என்ன மாதிரியான வாய்ப்புகள்? ஒரே கிழவியே இருவரையும் வளர்க்கிறாள். நொண்டி பசவன்தான் நாட்டை ஆள்கிறான். அவன் பிறப்பு - ஓர் இழிவு, வளர்ப்பு - மற்றோர் இழிவுமந்திரிப் பதவி - ஓரு பிச்சை. ஆனாலும்கூட அவன்தான் அரசை நடத்தும் கருவி. பிறப்பால், எண்ணத்தால் உயர்ந்த மற்ற மந்திரிகளோ, விசுவாசிகளோ, ஏன் மன்னனோ கூட அவனுடைய அதிகாரத்தில் கைவைக்க முடிவதில்லை. தன் சகோதரியை - அவள் மன்னனுக்கும் சகோதரி - மடி மேல் அமர்த்துகிறான், மன்னன் அனுபவிக்கும் பெண்களை அவனும் அனுபவிக்கிறான், மன்னனுக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் கூட்டிக் கொடுக்கிறான். ஒரு குழந்தையைக் கொல்லவேண்டிய சமயம் தவறியதை நினைத்துச் சந்தோசப்படுகிறான். தன்னை நாயோடு நாயாக்கிய சமூகத்தைப் பழிவாங்குகிறான். மிக முக்கியமாக யாரெல்லாம் நல்ல மனிதர்களாக இருக்கிறார்களோ அவர்களை எல்லோரையுமே துன்புறுத்துகிறான். இறுதியில் தகுதி எதுவும் அற்ற தன்னுடைய பிரதியினாலேயே கொல்லப்படுகிறான். வாழ்க்கை அரசனைப்போல அவனையும், கையாலாகாதவனாக ராஜேந்திரனையும் உருவாக்குகிறது. ராஜேந்திரனுக்குக் குற்ற உணர்வோ, தண்டனைகளோ எதுவும் இல்லை. இறுதிவரை அவன் செல்லாக்காசாகவே இருந்து முடிக்கிறான்.

இவையெல்லாம் தவிர்த்து இந்த நாவலில் வரும் பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மையோடு இருக்கிறார்கள். அரசருக்குப் பிறக்கும் தன் குழந்தையைக் கைவிடும் பகவதி, நீண்ட நெடும் காலம் காத்திருக்கிறாள். மகன் நொண்டி என்று அழைக்கப்படுவதை, அவன் தன்னைத்தானே தகுதிக் குறைவாக உணர்வதை, அவன் எடுபிடியாக இருப்பதை வெறுக்கிறாள். எப்படியேனும் தன் மகனை அரசனாக்க முயலும் அவள் சிக்கவீர ராஜேந்திரனைக் காப்பாற்றவும், அழிக்கவும் செய்கிறாள்.
இதற்கு முற்றிலும் மாறாக தன் கணவனை அரச பதவியில் நீடிக்கச் செய்யவும், அவனை மனிதனாக்கவும் கௌரம்மா முயன்று கொண்டே இருக்கிறாள். முற்றிலும் அழிவுப் பாதையில் செல்லும் சிக்கவீர ராஜேந்திரனை தன் மனவலிமையாலும், பக்தியாலும் மீட்டுவிட முயலும் அவள், அவனுக்குப் பதிலாக அரசை ஆள்வதையோ, அதிகாரத்திற்காக யாரையும் துன்புறுத்துவதையோ ஏற்பதில்லை. இறுதியில் சுயஅழிவின் மூலமே அவளுக்கு விடுதலை கிடைக்கிறது.

ராஜேந்திரனையும், பசவனையும் வளர்க்கும் கிழவி. அவளுக்கும் பகவதிக்கும் மட்டுமே பசவன் யாரென்று தெரியும். அவளுக்கு கால் முறிக்கப்பட்ட பசவன் மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது, அதே சமயம் விலக்கமும். சிக்கவீர ராஜேந்திரன் குறித்து அவள் கொண்டிருக்கும் சித்திரம்தான் முக்கியமானதாகப்படுகிறது. குழந்தையாகச் சிக்கவீரன் இருக்கும்போது தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறான், அது கிழவியின் காதை நனைக்கிறது. இந்த நிகழ்வைச் சொல்லி ஒரு பெண்ணை அவன் பிடியிலிருந்து அவளால் மீட்க முடிகிறது. இறுதிவரை அவள் தூக்கத்தில் படுக்கையை நனைக்கும் சிறுவனாகவே அவனைப் பார்க்கிறாள்.

ஆண்களே இந்த உலகை ஆள்வதாக நாம் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் பெண்களே இந்த உலகை ஆள்கிறார்கள். அவர்கள்தான் போட்டியை உருவாக்குகிறார்கள். உலகம் பெண் மையச் சமூகமாக இருந்ததன் எச்சமாக இன்றும் ஒவ்வொரு குடும்பமும் மறைமுகமாக பெண்களாலேயே வழிநடத்தப்படுகிறது, அதன் வழியே ஆண்களும் சமூகமும் இந்த உலகமும் கூட அவர்கள் காலடியிலேயே கிடக்கிறது. பெண்கள் மிக நுட்பமாக தங்கள் அதிகாரத்தைச் செலுத்தப் பழகிவிட்டனர். ஆண்களோ இதற்கு நேர்மாறான நிலையில், வெளிப்படையாக தாங்கள் அதிகாரம் செலுத்துவதாகக் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். அந்தக் கனவுகளில் தன் வாழ்வை இழக்கின்றனர். இந்த நாவலும் அப்படிப்பட்ட சூழலையே சித்தரிக்கிறது. தன்னைச் சுற்றி, உண்மையோடிருக்கும் நபர்கள் மீது தன் அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பிக்கும் போதும், அவர்களைக் காயப்படுத்தும்போதும் ஒரு தனி மனிதனின் அழிவு ஆரம்பமாகிறது. அந்தத் தனி மனிதன் தலைவனாக இருந்துவிட்டால் நாடே அழிந்துபோகும். தன் தங்கை, போபண்ணா, ரேவண்ண செட்டி, உத்தய்ய தக்கன் என்று சிக்க வீர ராஜேந்திரன் தன் அதிகார வெறியைச் செலுத்த ஆரம்பிக்கும் போது நல்ல மனிதர்களான அவர்கள் ஒவ்வொருவராக அவனைக் கைவிட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் தீமையின் முழு வடிவான நொண்டி பசவனோ இறுதிவரை சிக்கவீர ராஜேந்திரனைக் கைவிடுவதேயில்லை. இப்படியாக வாழ்வு அதன் போக்கில் முரண்களை விதைப்பதும் அறுப்பதுமாய் இருக்கிறது.

இது தவிரவும் அதிகார மட்டத்தில் இரண்டாம் இடத்திற்காக நடக்கும் போட்டிகள், அதற்கான நகர்வுகள், உள்ளடிகள், பேச்சு வார்த்தைகள், சமரசங்கள் என்று அது ஒரு தனி உலகமாக இயங்கியபடி இருக்கிறது. மாஸ்தி அவர்கள் தன்னுடைய அலுவல் வாழ்வில் நடந்த அனுபவங்களை, உரையாடல்களைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதிகாரத்தளத்தில் நடக்கும் உரையாடல்கள் இந்த நாவலின் தரத்தை ஒருபடி மேல் நகர்த்துகின்றன. மாஸ்தி அய்யங்காரும் ஓர் அதிகாரப் போட்டியின் இறுதியில் தோல்வியுற்று, அதனாலேயே உணர்ச்சி வசப்பட்டு வேலையை விட்டிருக்கிறார். அதன் பின் முழு நேர எழுத்தாளனாக வாழ்ந்திருக்கிறார். இதே நிகழ்வு நாவலில் மந்திரி போபண்ணாவிற்கு நிகழ்வதாக வருகிறது. இப்படியாக வரலாறு என்னவோ திரும்பத் திரும்ப நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது.

எழுத்தாளன் தானறிந்த அனைத்தையும் சேர்த்து ஒரே நாவலாக எழுத வேண்டுமென்றால் அதற்கு மாபெரும் உழைப்பும் ஆராய்ச்சியும் கற்பனையும் தேவைப்படும். மாஸ்தி அய்யங்கார் அப்படிப்பட்ட ஒரு கனவை முயற்சித்துப் பார்த்திருக்கிறார். எனக்கோ அது இன்னும் பெரும் கனவாய் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் அந்தந்த எழுத்தாளனின் உரிமை/தேர்வுதான் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள்ளத்தான் வேண்டும்.

அதே சமயம், ஒரு சிறுகதை ஒற்றை மையம் நோக்கி மட்டுமே பேசுவதாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு நாவல் மையம் நோக்கிக் குவியும் அதே நேரத்தில், அதைச் சுற்றிய சூழலும், சூழலுக்கு வெளியில் இருக்கும் அமைப்பும், மையத்திற்கு மறுபக்கம் இருக்கும் காரணங்களும் என விரிந்து பரவவும் வேண்டும். விரிவும் ஆழமுமே சிறந்த நாவலுக்கான வரையறை. எதைச் சொல்வது? எதை விடுவது? எது மையம்? எது நோக்கிச் செல்வது? என்பது குறித்து குழப்பம் வரும் போது எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால்தான் சிக்கவீர ராஜேந்திரன் எல்லாவற்றையும் பற்றிப் பேசியபடியே இருக்கிறது. இருந்தாலும் கூட, தமிழின் பெரும்பாலான வரலாற்று நாவல்களில் காணப்படும் வெற்றுக் கற்பனைகளோ, கிளுகிளுப்புகளோ, விதந்தோதல்களோ இல்லாத தரமான நாவல் என்றே சிக்கவீர ராஜேந்திரனைச் சொல்லலாம்.

மொழிபெயர்ப்பு இன்னும் கொஞ்சம் இயல்பாகவும் எளிமையாகவும் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் இந்த நாவலைத் தமிழிலேயே படித்தேன், ஒரு வேளை கன்னடத்தில் மாஸ்தி அவர்களின் சித்தரிப்புகள், மொழிவளம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கூடும்.

வாசிப்பிற்கு உதவிய தளங்கள்:

Sunday, June 26, 2016

நுங்கம்பாக்கம் – ரயில் நிலையம் - ஒரு நினைவு


என் சென்னை வாழ்வுல, நான் அதிக முறை போன இடம்னா அது நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன்தான். கிட்டத்தட்ட ஆறு வருஷம் சூளைமேட்டுல இருந்தேன். மாத பாஸ் 120 ரூபாய்க்கு வாங்கிட்டு, தினசரி வேலை இருக்கோ, இல்லையோ ரயில்ல பயணம் பண்ணுவது என் பழக்கம். அப்போ ஸ்டேசன் உள்ளார போகவும் வரவும் எங்களுக்குன்னு ஒரு வழி உண்டு. சவுராஷ்டிரா நகர் நாலாவது தெருவுல புகுந்து நேரே வந்தா ரயில்வே சுவர் உடைந்து இருக்கும், அது வழியா ஏறி ட்ராக்கைக் கடந்து உள்ளே போவோம். அதே போல இறங்கி வெளியிலும் வருவோம். இதெல்லாம் பகல்ல மட்டும்தான். ராத்திரில அந்த இடத்துல நாய் தொந்தரவு இருக்கும். அப்படி உள்ளே போகும் போது, எப்போவாவது டிக்கெட் செக் பண்ணுவாங்க. TC-க்கு எங்களை எல்லாம் நல்லாத் தெரியும், ஒன்னும் கேக்க மாட்டாரு. டிக்கெட் இல்லாம மாட்டுறவங்கள அந்தக் கடைசில இருக்க ரூம்ல நிக்க வைப்பாங்க. ஓரளவு ஆள் சேர்ந்த உடனே, எக்மோர் ஸ்டேசன் கூட்டிட்டுப் போய் தண்டம் கட்டவைக்கணும். அது கூட எப்போவாவதுதான் நடக்கும். அந்த ரூம் வாசல்ல எடை போடுற மிசின் ஒன்னு கெடக்கும். அந்த ரூமை தாண்டினா கிரானைட் பெஞ்ச் – வரிசையா இருக்கும். அதெல்லாமே சாயங்கால நேரத்துல லவ்வர்ஸ் பெஞ்ச்கள்.
இன்னொரு நடை மேடை வெளியூர் ட்ரைன்-களுக்காக இருக்கும். அதுல மாசம் ஒரு ட்ரைன் நிக்கிறதே பெருசு. அதுக்குப் போகணும்னா, ட்ராக் க்ராஸ் பண்ணனும் இல்லனா, வெளில போய் லயோலா ஒட்டி ஒரு பாதைல வந்து உள்ள வரணும். அந்தப் பாதைல புல் மண்டிப் போய் இருக்கும். அந்த நடை மேடைல ஒன்னு ரெண்டு கஞ்சா அடிமைகளைத் தவிர யாரும் இருக்க மாட்டாங்க.
ராத்திரி 12 மணி, அதிகாலை 5 மணினு எத்தனையோ முறை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன் போயிருக்கேன். சாயங்காலத்துல போய் கிரானைட் பெஞ்ச்ல உட்கார்ந்து புத்தகம் படிச்சுருக்கேன்.
(2008 ஆக இருக்கலாம்), இரவு 11 மணிக்கு மேல இருக்கும். மாம்பலத்துல இருந்து நுங்கம்பாக்கம் வந்துட்டு இருந்தேன். கோடம்பாக்கத்திற்கும், நுங்கம்பாக்கத்துக்கும் நடுவுல வண்டி நின்னு கெளம்பியது. நுங்கம்பாக்கத்தில் ரெம்பக் குறைவான பேர்தான் இறங்கினாங்க.
நான் படிக்கட்டுக்கிட்ட வரும்போது ஒரு இத்துப் போன ஸ்ரெச்சர்ல பழைய சாக்கை வச்சு எதையோ மூடி வச்சுக்கிட்டு, கைலி கட்டின ஒருத்தர் ஒவ்வொருத்தர்கிட்டையா அதைப் பார்த்துக்கச் சொல்லி கெஞ்சிக்கிட்டு இருந்தார். யாரும் நிற்கவில்லை. போய்கிட்டே இருந்தாங்க. கடைசியா வந்த என்கிட்ட கேட்டார். அவரிடம் இருந்து மட்ட ரக சாராய வாடை அடித்தது. நான் அவரிடம் ஸ்ரெச்சேரில் என்னனு கேட்டேன். 

அனாதைப் பொணம் சார். ரயில்ல அடிபட்டது. நாங்க ரெண்டு பேர் சேர்ந்து தூக்கினோம். அவன் போலீஸ் கூட எக்மோர் போய்ட்டான். அவனும் போலிசும் வர்ற வரை இங்கதான் இருக்கணும். அப்புறம் நோட் போட்டு ஜி.ஹச் போவனும் சார். ஸ்டேசன் மாஸ்டர போன் பண்ணி வர சொல்லணும். நான் மேல போயிட்டு வர்ற வரை இதைப் பார்த்துக்க சார். நான் ஓடிட மாட்டேன் – நம்பு சார். நீ வேணா நான் மேல போறதைப் பார்த்துகிட்டே இரு.
சரி போயிட்டு வாங்க நான் நிக்கிறேன்.
சுற்றிலும் பார்த்தா, எப்போவும் பூ விக்கிற அந்த அக்கா கூட இல்லை. நான் பக்கத்துல இருந்த பெஞ்ச்ல உட்காந்தேன். அவர் அந்தப் படி வழியா மேல போய் கவுன்ட்டர்ல இருக்க ஆள்கிட்டப் பேசுறதைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ அடிச்ச காத்துல சாக்கு விலகி உள்ளே இருக்கும் பிணத்தின் தலை தெரிஞ்சது. பெண், நீண்ட முடி. ஆனால், முகம்கிற ஒன்னே இல்லை. துண்டு துண்டா சிதறிய இடத்தில் பற்கள். உதடே இல்லை. பக்கத்தில இருந்த குச்சிய வச்சு சாக்கால் மறுபடி மூடினேன். அப்புறம் மறுபடி பறக்காம இருக்க ஒரு சின்னக் கல்லை அதன் மேல் வச்சேன்.
போனவர் அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தாப்ள.
மேல டிக்கெட் கவுன்ட்டர்ல இருக்கவர் இங்க வர மாட்றார். பொணம்னாப் பயமாம், டிக்கெட் வேற குடுக்கணுமாம். என்கிட்ட இருபது ருபாயக் குடுத்துட்டு, தயவு செஞ்சி பொணத்தப் பார்க்கக் கூப்பிடாதனு சொல்லிட்டாரு. என்னா சார் மனுசங்க. ஆள் வரட்டும், அதுவரை நானே பார்த்துக்குவேன். சரி சார் நீ கெளம்பு.
பரவால்லை. ஆள் வர வரைக்கும் நானும் இருக்கேன்.
நான் கல்லெடுத்து வச்சுருக்கிறதைப் பார்த்துட்டு, நாய்க்குப் பயந்துதான் உன்னை இங்க இருக்க சொன்னேன். அது வந்து இழுத்துப் போட்டுட்டு போயிரும். நெறைய இடத்துல நாங்க போறதுக்கு முன்னாடி நாய் இழுத்து, இங்கேயும் அங்கேயும் கெடக்குற பீசுங்கள எடுத்து பொட்டலமா ஆக்கித் தூக்கிட்டு வந்துருக்கோம். பெஜாராய்டும். முழுப்போதை இல்லாம இந்த வேலை செய்ய முடியாது. இனி இதைத் தூக்கி மார்ச்சுவரில போடுற வரை சாப்பாடு கெடியாது சார். இது அனாதைப் பொணம் வேற, எங்களுக்கு ஒன்னும் கெடைக்காது.
இடுப்பிலிருந்து ஒரு குவாட்டரை எடுத்து அதில் பாதியைத் தொண்டைக்குள் கவிழ்த்தார். அது மானிட்டர் பிராந்தி என்பது வெளிச்சத்தில் தெரிந்தது.
அரை மணி நேரத்தில் போலீஸ், இன்னொரு நபர், ஸ்டேசன் மாஸ்டர் எல்லாரும் வந்துவிட்டனர். நான் கிளம்பினேன். அப்போதெல்லாம் படி ரெம்பக் குறுகல். மேலே ஏறி இடப்பக்கம் திரும்பினேன். ஒரே ஒரு ட்யுப் லைட்தான். வரிசையாகப் பிச்சைக்காரர்கள் படுத்திருந்தார்கள். அவர்களை நான் பலமுறை இதே ரயில்வே ஸ்டேஷனில் பார்த்திருக்கிறேன். ஒரு குழந்தை குப்பை கூலங்களுக்கு நடுவே தனியாகக் கிடந்தது. கொஞ்சத் தூர இடைவெளியில், மனநிலை தவறிய ஒரு பெண், தன் அழுக்கான உடைகள் விலகப் படுத்திருந்தாள். அவள் கண்கள் திறந்திருந்தன. நான் நிதானமாகப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தேன்.
--------------------------------------------------------------------------------------
என் நினைவிற்காக:
மேலும், இதற்காக அப்போது ஒரு கவிதையும் எழுதினேன்.
சிறுகடவுளின் தலையெழுத்து

எப்போதும் விழித்தே இருக்கும் நரகத்தில்
"ஸ்டெத்" மணிகட்டிய பெருங்கடவுள் ஆணையிட்டார்
பலரின் தலையெழுத்தை வாசிக்க.
போதையேறிய சிறுகடவுளின் ஆயுதம்
பழைய சுத்தியும்
உடைந்த கத்தியும்
புழுத்து நாறும் அரசவையில்
நிறைகின்றனர்
அங்கங்கள் அற்ற அடிமைகள்.
சிறு கடவுளாய் இருத்தலின்
சாத்தியங்களைப் பழித்தபடி
வாசிக்கப்படுகிறது அவர்களின்
தலையெழுத்து.
......................தொடர் புள்ளிகளால்
நீட்டிக்கப் படுகிறது
சிறுகடவுளின் முற்றுப் புள்ளி.